×

திருவாரூர் – காரைக்குடி பயணிகள் ரயில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும்

பட்டுக்கோட்டை, மே 5:திருவாரூர் – காரைக்குடி – திருவாரூர் பயணிகள் ரயில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் மட்டும் இயங்கி வந்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் செல்ல இயலாமல் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். ரயில் பயணிகள், வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ரயிலை ஞாயிற்றுக்கிழமையும் இயக்க வேண்டும் என்று தொடர்ந்து தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே நிர்வாகம் இந்த ரயில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும் என நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் இந்த ரயில் வாரத்தில் 7 நாட்களும் இயங்கும். இந்த ரயில் திருவாரூரில் காலை 06.20 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு காலை07.56 மணிக்கு வந்தடைந்து தொடர்ந்து புறப்பட்டு காரைக்குடியை காலை 09.35 மணிக்கு சென்றடைகிறது.

மீண்டும் இந்த ரயில் மாலை 6.00 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு இரவு 07.13 மணிக்கு வந்தடைந்து தொடர்ந்து திருவாரூக்கு இரவு 09.25 மணிக்கு சென்றடைகிறது.இந்த ரயில் அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லை விளாகம், திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்ல இந்த ரயிலில் திருவாரூருக்கு சென்றால் திருவாரூரில், காரைக்கால் – சென்னை எழும்பூர் கம்பன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16176) மன்னை எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் 16180) விரைவு ரயிலில்களில் திருவாரூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்லலாம்.

அதுபோல சென்னையில் இருந்து இப்பகுதிகளுக்கு வருபவர்கள் திருவாரூரில் இருந்து இந்த ரயிலின் மூலமாக இப்பகுதிகளுக்கு வரலாம்‌.மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து திருவாரூர் வழியாக கம்பன் விரைவு ரயில், மன்னை விரைவு ரயிலில் சென்னை எழும்பூர் செல்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.ஞாயிற்றுக்கிழமையும் இந்த ரயில் இயங்க உத்தரவிட்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர், முதுநிலை கோட்ட இயக்கவியல் மேலாளர், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் மற்றும் அனைத்து ரயில்வே அதிகாரிகளுக்கும் ரயில் பயணிகள் சங்கத்தினர், வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள், ரயில் பயணிகள், என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர், சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post திருவாரூர் – காரைக்குடி பயணிகள் ரயில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Karaikudi ,Batukkottai ,
× RELATED பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்